![](road_image/vithikalaimerinal_enaseivathu.png)
சாலை விதி மீறல்கள் :
✇ நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட, அதிக வேகத்தில் வண்டி ஓட்டுவது, வண்டி ஓட்டும்போது, மொபைல் போனில் பேசுவது, மது அல்லது போதை மருந்து உட்கொண்டு வாகனம் ஓட்டுவது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பொருட்கள் அல்லது பயணிகளை ஏற்றி செல்வது, இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவரும் ஹெல்மெட் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தை சாலையில் இயக்குவது, தொடர்ந்து வரும் வாகனங்களுக்கு இடையூறை ஏற்படுத்துவது போன்ற செயல்கள் சாலைவிதிகளை மீறுவதாகும்.
✇ 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தலைகவசம் அணிவித்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் கார்களில் பயணம் செய்யும் போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு பட்டி அல்லது குழந்தைகளுக்கான பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
அபராதம் :
✇ விதிமீறும் வாகன ஓட்டிகளிடம் அந்த இடத்திலேயே போலீசார் அபராத தொகையை வசூலித்துக்கொண்டு ரசீது வழங்குவர்.
✇ மாநகரங்களில் எஸ்.ஐ முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகளும், மாவட்டங்களில் இன்ஸ்பெக்டர் முதலான போலீஸ் அதிகாரிகளும், போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களும், போக்குவரத்துதுறை அதிகாரிகளும் ‘ஸ்பாட் பைன்’ வசூலிக்கலாம்.
✇ போலீசார் வாகன சோதனை நடத்தும் இடங்களிலேயே லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் போன்ற முறையான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடமும், சாலை விதிகளை மீறுபவர்களிடமும் உடனடியாக அபராதம் வசூலிக்கலாம். அதற்கான ரசீது, வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும். அபராத பணத்தை இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் வசூல் செய்யலாம். தினமும் வசூல் செய்யப்படும் பணத்தை வேலை நாட்களில் அரசு கருவூலத்தில் கட்ட வேண்டும்.
✇ குறிப்பாக மது அல்லது போதை மருந்து உட்கொண்டு வண்டி ஓட்டுபவர்கள் முதல் முறை பிடிபட்டாலும், எந்தவித சலுகையும் காட்டாமல், சிறையில் அடைக்கவேண்டும். அவர்கள் மீது, 1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம், பிரிவு 185ன் கீழ், வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
✇ அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள யூனியன் பிரதேசங்களில், 1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம், பிரிவு 19 மற்றும் 1989ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன சட்டம், பிரிவு 21ன் படி, காலவரையின்றி ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்வது முதல் அவர்களை சிறையில் அடைப்பது வரையிலான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகள் வழங்கவேண்டும்.
✇ சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால், அந்த ஓட்டுனர் ரூ. 50,000 அபராதம் கட்ட வேண்டும். ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். இவைமட்டுமல்ல, சாதாரண தவறுகளுக்கு கூட தண்டனைத் தொகை தற்போதைய தொகையைவிட 10 முதல் 50 மடங்கு அதிகம்.
✇ விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வரை, சாலை பாதுகாப்பு குறித்த பாடத்தை படிக்க உத்தரவிட வேண்டும். இந்த பாடம், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவோருக்கும் பொருந்தும்.
✇ முதல் முறையாக விதி மீறினால் குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூலிக்கப்படும். 2-வது முறையும் அதே குற்றத்தை செய்தால் கூடுதல் தொகை அபராதமாகவும் விதிக்கப்படும்.
✇ வாகன ஓட்டி, ஒருமுறைக்கு மேல் சிக்கியுள்ளாரா என்பதை தெரிந்து கொள்ள வெய்க்கிள் டிராக்கிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும்.
அபராத விவரம்:
குற்றங்கள் | முதல் முறை | 2வது முறை மற்றும் அதற்கு மேல் செய்தால் |
---|---|---|
வாகன பதிவை புதுப்பிக்க தவறுதல் | 100 | 300 |
பெயர் மாற்றம் செய்யாமல் இருத்தல் | 100 | 300 |
போக்குவரத்து உத்தரவுகளை மீறுதல் | 100 | 300 |
இருசக்கர வாகனங்களில் மூவர் பயணித்தல் | 100 | 300 |
ஹெல்மெட் இல்லாமல் பயணித்தல் | 100 | 300 |
லைசென்ஸ், ஆர்சி புக் இல்லாமல் பயணித்தல் | 100 | 300 |
போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் | 500 | 500 |
லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டுதல் | 500 | 500 |
ஓட்டுனர் தகுதி இழந்தவர்கள் வாகனம் ஓட்டுதல் | 500 | 500 |
அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் | 400 | 1000 |
அபாயகரமாக ஓட்டுதல் | 1000 | 2000 |
மனதளவில், உடல்அளவில் சரியில்லாமல் ஓட்டுதல் | 200 | 500 |
பதிவு செய்யப்படாத வாகனம் ஓட்டுதல் | 2500 | 5000 |
ஓவர் லோடு | 2000 | 2000 |
இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (பைக்) | 500 | 1000 |
இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (நான் டிரான்ஸ்போர்ட்) | 700 | 1000 |
இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் (டிரான்ஸ்போர்ட்) | 1000 | 1000 |